வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை மாயம்- பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது மாயமான 3 வயது பெண் குழந்தை 3 நாட்களுக்குப் பிறகு வீட்டருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியை சேர்ந்த விவசாயி தரணி-பிரியா ஆகியோரின் மூன்று வயது குழந்தை ஜெயப்பிரியா. கடந்த செவ்வாய்கிழமை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது தாய் வீட்டிற்குள்ளே சென்று பிறகு வெளியே வந்து பார்த்த போது, குழந்தை காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில் இதுகுறித்து குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் தரணி- பிரியா புகார் அளித்தனர். இதனையடுத்து கடந்த மூன்று நாட்களாக காணாமல் போன குழந்தையை தேடி வந்த நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு காணாமல் போன குழந்தை ஜெயப்பிரியா வீட்டின் அருகே உள்ள பாலடைந்த கிணற்றில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் தாலுகா போலீசார் பாலடைந்த கிணற்றிலிருந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன பெண் குழந்தை மூன்று நாட்களுக்குப் பின்பு கிணற்றில் சடலமாக மீட்டக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மூன்று வயது குழந்தை விளையாடும்போது தவறி வந்து கிணற்றில் விழுந்து விட்டாரா? அல்லது விரோதம் காரணமாக குழந்தையை தூக்கிச் சென்று கொலை செய்து கிணற்றில் வீசி விட்டுச் சென்றார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.