நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

 
Bus

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

வருகிற 15ம் தேதி முதல் பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட உள்ளது. இதனையொட்டி பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றன. இந்நிலையில், பொங்கள் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழகம் முழுவதும் ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையும் 16,932  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.   சென்னை, கோவை, திருப்பூர், சேலம் போன்ற தொழில் நகரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களுக்கு  சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன 

இந்நிலையில், நேற்று முதல் நாளில் சென்னையிலிருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 586 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,686 பேருந்துகளில் 1,34,300 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.