இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல! டென்ஷனாகும் துரைமுருகன்

 

இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல! டென்ஷனாகும் துரைமுருகன்

தேர்தல் முடிவு வருவதற்குள் அவசர அவசரமாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல் 6.4.2021 அன்று தான் நடந்து முடிந்திருக்கிறது. ஆட்சி மன்றத்திற்கான சூழலை இந்த தேர்தல் உருவாக்கிருக்கின்ற நல் தருணம் இது. புதிய அரசு பல புதிய சிந்தனை திட்டங்களோடு பதவிக்கு வரும் என்ற நிலை மிக தெளிவாக தெரிகிறது. 06.4.2021 அன்று வாக்கு எண்ணிக்கை எண்ணி முடிக்கப்பட்டு இருந்தால், இந்த நேரம், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி பதவி ஏற்றுயிருக்கும். ஆனால் ஓட்டு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட இந்த ஒரு மாதம் காலம் எந்த முடிவு எடுக்காமல் இருப்பது தான் மரபு.

புதிய அறிவிப்புகளை, அதுவும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் அதன் நிர்வாகப் பொறுப்பை பல ஆண்டுகளுக்கு ஏற்கபோகும் துணை வேந்தர்களின் பெயர்களை ஆளுநர் அவர்கள் அவசர அவசரமாக வெளியிட்டு இருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல.

இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல! டென்ஷனாகும் துரைமுருகன்
  1. காந்திராம கிராமிய பல்கலைக்கழக துணை வேந்தராக எஸ். மாதேஸ்வரன்,
  2. கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் செல்வகுமார் இவை இரண்டும் ஆளுநர் அறிவித்ததாக செய்தித்தாள்களில் வெளிவந்த அறிவுப்புகள். பல நாட்களாக நிரப்படாமல் இருந்த இந்த பதவிகளை புதிய அரசு வந்து நிரப்பினால் இமயமலை என்ன இரண்டாகவா பிளந்து விடும்.

இந்த இரண்டு போதாது என்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக, கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசு அதன் பங்கிற்கு நியமித்து இருக்கிறது. “தேர்தல் வருவதற்கு முன்பு இருந்த நடைமுறையில் இருந்த விஷயங்கள்தான் இவைகள். இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது” என்று ஆயிரம் காரணங்களை ஆளுநர் மாளிகை கூறினாலும், பொறுத்ததுதான் பொறுத்தீர் இன்னும் ஏன் ஒரு மாத காலம் பொறுக்க கூடாது என்பதுதான் எமது கேள்வி.

முறையான துணை வேந்தர்களை நியமிக்காததால், அகில உலக புகழ் பெற்ற சென்னை பல்கலைக் கழகம் எப்படி சீர்கெட்டு அழிந்து நிற்கிறது என்பதை பல்வேறு ஊடகங்கள் எடுத்து காட்டி இருக்கிறது. முடிந்தால் ஆளுநரின் செயலாளர்கள் ஆளுநர் பார்வைக்கு கொண்டு செல்லட்டும். இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல!” என குறிப்பிட்டுள்ளார்.