இயக்குநர் அவதாரம் எடுக்கவிருந்த நடிகர் விவேக்! வெளியான புது தகவல்

 

இயக்குநர் அவதாரம் எடுக்கவிருந்த நடிகர் விவேக்! வெளியான புது தகவல்

நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ ஆபரேஷன் செய்யப்பட்டது. நுரையீரல் மற்றும் இதயத்தை செயல்படவைக்கும் எக்மோ கருவி உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன்தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவேக் இன்று மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உயிரிழப்புக்கு திரைபிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இயக்குநர் அவதாரம் எடுக்கவிருந்த நடிகர் விவேக்! வெளியான புது தகவல்

இந்நிலையில் சத்ய ஜோதி பிலிம்ஸின் உரிமையாளர் டீ. ஜி. தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பத்மஸ்ரீ திரு.விவேக்கின் மறைவு நம் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு நல்ல மனிதர், சமூக ஆர்வலர், நகைச்சுவையாளர், பகுத்தறிவாளர் மட்டுமல்லாது எதிர்கால ஒரு சிறந்த இயக்குநரையும் நாம் இழந்துவிட்டோம். ஆம்,கடந்த ஒரு மாத காலமாக எங்கள் ஜோதி நிறுவனத்திற்கு வந்து எங்களது தயாரிப்பில்தான் அவருடைய முதல் படத்தை இயக்க வேண்டுமென விருப்பப்பட்டு பல முறை கதை அலோசனையிலும் ஈடுபட்டு படப்பிடிப்பிற்கான முன்னேற்பாடுகளையும், நடிகர்- நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வும் நடத்திக் கொண்டிருக்கும் தருவாயில் அவர் மறைந்த செய்தி எங்களையும் மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்ற மற்றுமொரு பரிமாணத்தை நம்மிடையே காண்பிக்கும் முன்பே இறைவனடி சேர்ந்தது நமது துரதிர்ஷ்டமே. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.