தனியார் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து… பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்…

 

தனியார் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து… பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்…

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே தனியார் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பருத்தி மற்றும் சோளம் எரிந்து சேதமடைந்தன.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அடுத்த நாரணமங்கலம் சிறுகன்பூர் பகுதியில் ராமராஜ் என்பவருக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதி விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியதால், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர்.

தனியார் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து… பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்…

இதுகுறித்து சேமிப்பு கிடங்கின் மேலாளர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு 3-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தில் ஆலையில் வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பருத்தி மற்றும் மக்காச்சோளம் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.