கிணற்றில் மிதந்த 9 சடலங்கள்: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தின் கோரே குந்தா என்ற கிராமத்தில் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
இங்கு மேற்குவங்கத்தைச் சேர்ந்த மசூத் என்பவர் பணியாற்றி வந்தார். இதனால் கரிமாபாத்தில் வாடகை வீட்டில் இருந்து வந்தார். தற்போது தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் வாடகை கொடுக்க வழியின்றி உரிமையாளருக்கு சொந்தமான குடோனில் குடும்பத்துடன் தங்கி வந்துள்ளார். இதையடுத்து மசூத் குடும்பத்துடன் காணாமல் போனதாக அவரின் முதலாளி சந்தோஷ் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 21 ஆம் தேதி தொழிற்சாலைக்கு அருகில் உள்ள கிணற்றில் சடலங்கள் மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைக்க சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு மசூத், அவரது மனைவி நிஷா, கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த அவரது மகள் புஸ்ரா, அவரது மூன்று வயது மகன் உடலை மீட்டனர். இதை தொடர்ந்து மறுநாள் அதே
கிணற்றில் மசூத் மகன் சபாக், பீகாரை சேர்ந்த தொழிலாளிகள் ஸ்ரீராம், ஷாம், திரிபுராவை சேர்ந்த ஷகீல் அகமது என மேலும் 5 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒரே கிணற்றில் 9 சடலங்கள் கைப்பற்றப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் விசாரணையை தீவிரப்படுத்தியதில் கிணற்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதன் முதல் நாள், மசூத்தின் மகனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் ஷா வந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
அதில் மசூத்தின் மகளான புர்ஷா திருமணமாகி, கணவரைப் பிரிந்த நிலையில் சஞ்சய் குமார் ஷாவுக்கு தொடர்பு இருந்துள்ளது. ஆனால் இந்த உறவை புர்ஷா கைவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் குமார் பிறந்தநாள் நிகழ்ச்சியில் விஷம் கலந்த குளர்பானத்தை 9 பேருக்கும் கொடுத்து அவர்கள் மயங்கிய போது உடல்களைக் தூக்கி அருகில் உள்ள கிணற்றில் போட்டுள்ளார். இந்த கொலையில் சஞ்சய் குமார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.