சமைத்தபோது சேலையில் தீப்பற்றியதில் இளம்பெண் பலி… வருவாய் கோட்டாட்சியர் விசாரணை!

 

சமைத்தபோது சேலையில் தீப்பற்றியதில் இளம்பெண் பலி… வருவாய் கோட்டாட்சியர் விசாரணை!

திருவண்ணாமலை

வந்தவாசி அருகே சமையல் செய்தபோது ஆடையில் தீப்பற்றியதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நல்லூரை சேர்ந்தவர் மோகன். கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு முத்தம்மாள் (21) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி முத்தம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மண்ணெண்ணை அடுப்பில் இருந்து அவரது புடவையில் தீ பற்றியது. சிறிது நேரத்தில் உடல் முழுவதும் தீ பரவியதால் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார்.

சமைத்தபோது சேலையில் தீப்பற்றியதில் இளம்பெண் பலி… வருவாய் கோட்டாட்சியர் விசாரணை!

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர், சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்கை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முத்தம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து முத்தம்மாளின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில் தெள்ளார் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளில் முத்தம்மாள் உயிரிழந்ததால் இதுகுறித்து செய்யாறு வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை செய்து வருகிறார்.