தனிமனித இடைவெளியோடு மதிய உணவும் மாணவர் சந்திப்பும் – தாய்த்தமிழ் பள்ளியின் புது முயற்சி

 

தனிமனித இடைவெளியோடு மதிய உணவும் மாணவர் சந்திப்பும் – தாய்த்தமிழ் பள்ளியின் புது முயற்சி

கொரொனா பரவல் தமிழகம் முழுவதும் அதிகளவில் உள்ளதால் எப்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்பதே தெரியவில்லை. தற்போது கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணிப்பிக்க அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களைச் சந்திக்க பாதுகாப்புடன் திண்டிவனம் தாய்த்தமிழ் பள்ளி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அது குறித்து அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

தனிமனித இடைவெளியோடு மதிய உணவும் மாணவர் சந்திப்பும் – தாய்த்தமிழ் பள்ளியின் புது முயற்சி

அந்த அறிக்கையில், ‘தொடரும் ஊரடங்கினால் மாணவர்களின் உடல், மனம் மற்றும் கல்வி பாதிப்படையத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக குழந்தைகள் நலனுக்கான ஐ.நாவின் யுனிசெஃப் அமைப்பு, கொரோனா தாக்கத்தினால் உலக அளவில் 1 கோடி குழந்தைகள் இடைநிற்றல் ஆவர் என்றும், 8.6 கோடி குழந்தைகள் வறுமையின் பிடியில் சிக்குவர் என்றும் ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது. அன்றாட வேலைக்குச் செல்லும் குடும்பங்களில், பெற்றோருக்கு வேலையும் வருமானமும் இல்லாத சூழலும் உருவாகி பாதிப்புகளை அதிகரிக்கின்றது.

இந்நிலையில், தாய்த்தமிழ் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது மற்றும் ஆசிரியர் மாணவர் சந்திப்பு நடத்துவது என திட்டமிடப்பட்டது. இதற்காக 3 முறை பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டது.

பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி நிர்வாகக் குழுவின் சார்பில் நடைபெற்ற 3 கூட்டங்களின்போது, பள்ளிகளில் பயிலும் மாணவர்களை தெருவாரியாக கணக்கெடுத்து, ஒவ்வொரு தெருவிலும் ஒரு வீடு உணவு வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டது. அதனடிப்படையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 149 மாணவர்களுக்கு உணவு வழங்க 11 மையங்கள் (வீடுகள்) தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு மையத்திலும் 10 முதல் 15 மாணவர்கள் உள்ளனர். ஒரு நேரத்தில் 8 மாணவர்களுக்கு மட்டும் தனி மனித இடைவெளியுடன் உணவு வழங்கி, ஆசிரியர் மாணவர் சந்திப்பு நடத்தப்பட்டது. அவர்கள் சாப்பிட்டு முடித்தபிறகு அடுத்த 8 மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. சந்திப்பு நடத்தப்பட்டது.

தனிமனித இடைவெளியோடு மதிய உணவும் மாணவர் சந்திப்பும் – தாய்த்தமிழ் பள்ளியின் புது முயற்சி

ஒவ்வொரு வீட்டிலும் சோப்பு, சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டது. மேலும் அனைத்து வீடுகளிலும் காலையில் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இந்தப் பணியில் மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.
• மாணவர்கள் அனைவரும் உற்சாகமாகவும், ஆர்வமாகவும் பங்கேற்றனர்.
• பல மாதங்களுக்கு பின்பு சந்தித்த சக மாணவ நண்பர்களுடன், ஆசிரியர்களுடன் மகிழ்வோடு கலந்துரையாடினர்.
• ஆசிரியர் செல்வதற்கு முன்பாக சில மையங்களில் மாணவர்கள் வந்திருந்தனர்.
• 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மொத்தம் 149 மாணவர்களில், 132 மாணவர்கள் முதல் நாளான இன்று வந்திருந்தனர்.
• வராத மாணவர்களில் பெரும்பாலோனர் வெளியூர் சென்றுள்ளனர்.
• ஒரு மையத்திற்கும், வேறு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் வந்து, எங்கள் பள்ளிக்கு இதுபோன்று எங்கு வைத்துள்ளார்கள் என்று கேட்டனர்’ என்று குறிப்பிட்டுள்ளது.