ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30% மானியம்- தமிழக அரசு அதிரடி

 

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30% மானியம்- தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்திட, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு அவசியமான மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகம் தற்சார்பு அடைவதற்கான வழிமுறைகள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை 11-5-2021 அன்று நடத்தினார்கள்.

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30% மானியம்- தமிழக அரசு அதிரடி

அக்கூட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது அறிவுறுத்தலின்படி, மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பின்வரும் சிறப்புத் தொகுப்பு சலுகைகளை அறிவித்துள்ளது:-

(i) ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, ஆக்சிஜன் உருளை மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30ரூ மூலதன மானியம் இரண்டு சம ஆண்டு தவணைகளில் வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெறுவதற்கு தொடர்புடைய நிறுவனங்கள் 2021, ஆகஸ்ட் 15-க்குள் உற்பத்தியைத் தொடங்கவேண்டும். 2021 ஜனவரி 1, 2021 முதல் ஆகஸ்ட் 31, 2021 வரை செய்யப்படும் முதலீடுகளும் இதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

(ii) குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 10 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட பெரிய நீர்ம ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க ஜனவரி 1, 2021 முதல் நவம்பர் 30, 2021 வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு 30% மூலதனமானியம் 5 ஆண்டுகளில் வழங்கப்படும். இந்த சலுகையை பெறுவதற்கு நிறுவனங்கள் 30.11.2021க்கு முன்னர் உற்பத்தியை தொடங்க வேண்டும்.

(iii) அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் ஆண்டுக்கு 6% வட்டி மானியத்துடன் உடனடியாக கடன் வழங்கப்படும்.

(iv) அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிப்காட்/சிட்கோ நிறுவனங்கள் மூலம் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும்.

(v) அத்தகைய முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் மூலம் கட்டணம் ஏதுமின்றி ஒற்றை சாளர முறையில் விரைந்து அனுமதி வழங்கப்படும்

(vi) கொரோனா தொடர்பான மருத்துவ பொருட்களான ஆக்சிஜன் செறிவு, தடுப்பூசிகள், ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் புதிய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் துணைபுரியும். இந்தச் சிறப்பு தொகுப்பு சலுகைகள் தமிழ்நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.