உள்நாட்டு விமான பயணம் குறித்த தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் வெளியானது

 

உள்நாட்டு விமான பயணம் குறித்த தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் வெளியானது

சென்னை: உள்நாட்டு விமான பயணம் குறித்த தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் மாத இறுதியில் இருந்து நான்கு கட்டங்களாக நாட்டில் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. சிறப்பு விமானங்கள், சரக்கு விமானங்கள் தவிர மற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாளை முதல் நாட்டில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கவிருக்கிறது. விமான நிலையங்களில் பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஏற்கனவே மத்திய அரசு அறிவித்து விட்டது.

உள்நாட்டு விமான பயணம் குறித்த தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் வெளியானது

தற்போது உள்நாட்டு விமான பயணம் குறித்து தமிழக அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் தங்களின் விவரங்களை தமிழ்நாடு இ-பாஸ் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் ஆகும்.

தமிழகம் வர விரும்பும் பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், சளி இருக்கிறதா? அவர்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறார்களா? கடைசி இரண்டு மாதங்களில் அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாதவர்களா? போன்ற பல விவரங்களை அந்த இணையதளத்தில் பயணிகள் பதிவு செய்ய வேண்டும். அதேசமயம் இந்த இ-பாஸ் இணையதளத்தில் தவறான தகவல்களை அளித்து தமிழகம் வர முயற்சி செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.