மலேரியா காய்ச்சல்… அறிகுறிகள் அறிவோம்!

 

மலேரியா காய்ச்சல்… அறிகுறிகள் அறிவோம்!

வைரஸ், பாக்டீரியா கிருமியால் மட்டுமல்ல ஒட்டுண்ணியாலும் காய்ச்சல் ஏற்படலாம் என்பதற்கு மலேரியா சாட்சி. அதுவும் உயிரைப் பறிக்கும் அளவுக்கு மோசமான காய்ச்சலாக அது இருக்கிறது என்பதுதான் கவனிக்கத்தக்கது. கொசுக்கள் கடிப்பதன் மூலம் மலேரியா காய்ச்சலை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் என்ற ஒட்டுண்ணி மனித உடலுக்குள் நுழைகிறது.

மனித உடலுக்குள் நுழைந்த ஒட்டுண்ணி நேராகக் கல்லீரலுக்குச் சென்று முதிர்ச்சி அடைகிறது. ஏழு நாட்களில் நன்கு வளர்ச்சி அடைந்த பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி ரத்தத்தில் கலந்து ரத்தச் சிவப்பு அணுக்களைத் தாக்குகிறது. அடுத்த 48 முதல் 72 மணி நேரத்தில் ரத்த சிவப்பு அணுக்களில் இந்த ஒட்டுண்ணிகள் வேகமாக வளர்கின்றன. ரத்தத்தில் கலந்து வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும் ஒட்டுண்ணி மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த மேலும் இரண்டு முதல் மூன்று நாட்கள் எடுத்துக்கொள்கிறது.

மலேரியா காய்ச்சல்… அறிகுறிகள் அறிவோம்!

உலக சுகாதார நிறுவனத்தின் 2016ம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலகம் முழுவதும் 91 நாடுகளில் மலேரியா பாதிப்பு காரணமாக அந்த ஆண்டில் மட்டும் 21.6 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனித உடலுக்குள் நுழைந்த மலேரியா தொற்று பாதிப்பை ஏற்படுத்த 10 நாட்கள் முதல் நான்கு வாரங்கள் வரை நேரத்தை எடுத்துக்கொள்கிறது. சில நேரங்களில் உடலுக்குள் அமைதியாக இந்த ஒட்டுண்ணி தங்கியிருக்கும். பல மாதங்களுக்கு எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது. திடீரென்று பாதிப்பை வெளிப்படுத்தும்.

பொதுவான அறிகுறிகள்:

மிதமானது முதல் அதிதீவிர குளிர், நடுக்கம் ஏற்படலாம்.

அதிக காய்ச்சல் ஏற்படலாம்.

வியர்வை

தலைவலி

குமட்டல், வாந்தி

வயிற்று வலி, வயிற்றுப் போக்கு

ரத்த சோகை

தசை வலி

மலத்தில் ரத்தம் கலந்து செல்வது

சோர்வு

வேகமாக சுவாசித்தல்

இதயத்துடிப்பு அதிவேகமாக அதிகரித்தல்

கோமா

சிலருக்கு அதிக குளிர் நடுக்கம் இருக்கும். அதைத் தொடர்ந்து கடும் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு இயல்பு வெப்பநிலைக்குத் திரும்புவார்கள். இது தொடர்ந்து மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். இதை மலேரியா அட்டாக் என்று சொல்வார்கள்.

அறிகுறிகள் வெளிப்படக் கொசு கடித்த சில வாரங்களிலிருந்து ஒரு ஆண்டு வரையிலும் கூட ஆகலாம் என்பதால் கவனம் தேவை.

மலேரியா ஒட்டுண்ணி கல்லீரலிலேயே தங்கியிருக்கும். எனவே, ரத்தம் தானமாக வழங்குவது, உடல் உறுப்பு தானமாக பெறுவது, ஒருவர் பயன்படுத்திய ஊசியை மற்றவர் பயன்படுத்துவதன் மூலமாகவும் மலேரியா பரவலாம்!

மலேரியா காய்ச்சல்… அறிகுறிகள் அறிவோம்!

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மலேரியா…

மலேரியா பலரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். மலேரியா காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் பெருமூளையில் வீக்கம் ஏற்படலாம்.

நுரையீரலில் அதிகப்படியாக திரவம் சுரப்பதால் நுரையீரல் வீக்கம் ஏற்படலாம்.

சிறுநீரகங்கள், கல்லீரல், மண்ணீரல் ஆகியவை செயலிழக்கலாம்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துவிடலாம். எனவே, தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது!