நீதிமன்ற அவமதிப்பு… பிரஷாந்த் பூஷனுக்கு ரூ.1 அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனுக்கு ரூ.1 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி பாப்டே நாக்பூரில் பா.ஜ.க நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான பல லட்சம் மதிப்புடைய மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கும் படம் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் சர்ச்சைக்குரிய பதிவை ட்விட்டரில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கில் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். தண்டனை வழங்குவதற்கு முன்பு, பிரஷாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் கோரியது. ஆனால், அவர் மன்னிப்பு கேட்க முடியாது. நீதிமன்றம் வழங்கும் தண்டனையை ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
நீதிபதி அருண் மிஸ்ரா இந்த வழக்கில் பிரஷாந்த் பூஷனுக்கு ரூ.1 அபராதம் விதித்தார். அபராதத்தை கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனையும் மூன்று ஆண்டுகளுக்கு வழக்கில் ஆஜராகத் தடையும் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த ஒரு ரூபாய் அபராதத்தை பிரஷாந்த் பூஷன் வருகிற 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்தி வழக்கை முடித்துக்கொள்வாரா அல்லது மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்து வழக்கை நீட்டிப்பாரா என்பது தெரியவில்லை.