அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் யோகி அரசு மேல்முறையீடு.. தடை விதித்த உச்ச நீதிமன்றம்
லக்னோ உள்ளிட்ட 5 மாவட்டங்களில் லாக்டவுன் விதிக்க உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உத்தர பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
உத்தர பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் புதிதாக 30,596 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. மேலும் 129 பேர் கொரோனாவால் உயிர் இழந்தனர். இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமையன்று பிரயாக்ராஜ், லக்னோ, வாரணாசி, கான்பூர் மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங்களில் 20ம் தேதி (நேற்று) முதல் 26ம் தேதி வரை லாக்டவுன் அமல்படுத்துமாறு உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்பு உள்ள பிரயாக்ராஜ், லக்னோ, வாரணாசி, கான்பூர் மற்றும் கோரக்பூர் உள்ளிட்ட நகரங்களில் லாக்டவுன் விதிக்க மாட்டோம் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அறிவித்தது. மேலும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச மேல்முறையீடு செய்தது.
உச்ச நீதிமன்றம் நேற்று உத்தர பிரதேச அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்தது. பின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது உத்தர பிரதேச அரசுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.