குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – வருவாய் கோட்டாட்சியர் விசாரணை!

 

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – வருவாய் கோட்டாட்சியர் விசாரணை!

தென்காசி

தென்காசி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவர் மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓடைமறிச்சான் பகுதியை சேர்ந்த கண்ணகி (23) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவர் மும்பையில் தங்கியிருந்ததால், கண்ணகி குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் தங்கியிருந்து, பீடி சுற்றும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – வருவாய் கோட்டாட்சியர் விசாரணை!

இந்த நிலையில், கண்ணகியின் தம்பியின் திருமண நிகழ்ச்சிக்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு சுடலைமுத்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது, பீடி சுற்றும் வேலைக்கு செல்ல வேண்டாம் என அவர் கண்ணகியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த கண்ணகி, நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார், கண்ணகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகி 4 ஆண்டுகளில் அவர் தற்கொலை செய்து கொண்டதால், இதுகுறித்து தென்காசி ஆர்.டி.ஓ விசாரித்து வருகிறார்.