மதுரையில் எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் திடீர் தீ விபத்து; பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்!

 

மதுரையில் எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் திடீர் தீ விபத்து; பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்!

மதுரை

மதுரையில் மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

மதுரை டவுன்ஹால் சாலை பெருமாள் தெப்பக்குளம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நேற்றிரவு பணிமுடிந்து உரிமையாளர்கள் கடைகளை பூட்டிச்சென்ற நிலையில், 11 மணியளவில் இங்குள்ள கடை ஒன்றில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

மதுரையில் எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் திடீர் தீ விபத்து; பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்!

அதற்குள்ளாக தீ மளமளவென அருகில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கும் பரவியது. இதனால் கடைகள் அமைந்திருந்த வணிக வளாகம் எங்கும் தீப்பற்றி எரிந்தது. சம்பவ இடத்திற்கு 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின், அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டவந்தனர்.

இந்த தீ விபத்தில் கடைகளுக்குள் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான மின்னணு சாதனங்கள் எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.