பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து: ஊழியர் படுகாயம்!

 

பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து: ஊழியர் படுகாயம்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் வெடிகள் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெடி விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. அண்மையில் காட்டுமன்னார் கோவில் அருகே இருந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து, மீனாம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த ஆலையிலும் வெடி விபத்து ஏற்பட்டது.

பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து: ஊழியர் படுகாயம்!

இந்த நிலையில் தற்போது சிவகாசி அருகே இருக்கும் வெம்பக்கோட்டை கங்கர்செவல்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில், வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. ஆலைக்கு இன்று காலை வழக்கம் போல பணிக்கு திரும்பிய ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென பலத்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியதால், ஆலை முழுவதும் தீப்பற்றத் தொடங்கியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.