சிபிசிஐடி மிரட்டலால் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக வெளியிட்ட வீடியோவை நீக்கிய பாடகி சுசித்ரா!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணையின்போது காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாலிவுட், கோலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் இந்த சம்பவத்தை கண்டித்தோடு, தவறு செய்த காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனிடையே, ஆர்ஜேயும் பாடகியுமான சுசித்ரா, இந்த சம்பவம் தொடர்பாக ஆங்கிலத்தில் வெளியிட்ட வீடியோ, இச்சம்பவத்தை தமிழகத்தை தாண்டி எடுத்துச் சென்றது என்று கூறப்பட்டது. அந்த வீடியோவில் சாத்தான் குளம் சம்பவத்தை அமெரிக்காவில் போலிசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவத்தோடு ஒப்பிட்டு பேசியிருந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த சுசித்ரா, “கடந்த எதிர்கட்சி ஆட்சியிலும் இதேப் போன்று சம்பவம் நடந்த வீடியோவை பதிவு செய்ய வேண்டும். அதற்காக 2 கோடி ரூபாய் வரை தனக்கு பேரம் பேசப்பட்டது. அன்றிலிருந்து எனக்கு தூக்கமே வரவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை மரணம் தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்ட காணொளி முற்றிலும் உண்மைதன்மையற்றது, அதனை நம்ப வேண்டாம் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.
Correction: The CB-CID called. And threatened arrest for spreading fake news with intent to cause anarchy. Deleted the video under the advise of my lawyer who said they are definitely capable of doing it. Pls watch this case people – there’s a lot of foul play being employed. https://t.co/MeALn0o8RA
— Suchitra (@suchi_mirchi) July 11, 2020
இந்நிலையில், சிபிசிஐடி போலீசாரின் அறிவிப்பை தொடர்ந்து தான் பதிவிட்ட வீடியோவை பாடகி சுசித்ரா நீக்கிவிட்டார். வீடியோவை நீக்கியது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சுசித்ரா, சிபிசிஐடி போலீசார் அழைத்ததாகவும், போலி செய்திகளை பரப்பியதற்காக கைது செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தியதாக தெரிவித்தார். எனவே வழக்கறிஞரின் அறிவுரைப்படி வீடியோவை நீக்கியதாக சுசித்ரா தெரிவித்தார்.