‘ஒரே ஒரு போன் கால்’… திருமணத்தை தடுத்து நிறுத்தி பெற்றோரை நடுங்க வைத்த பள்ளி மாணவி!
தமிழகத்தில் குழந்தை திருமணத்துக்குப் பஞ்சமே இல்லை. சட்டத்திற்கு எதிரான அத்தகைய செயலை செய்ய வேண்டாம் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருப்பினும், பல இடங்களில் குழந்தை திருமணம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை ஒரே போன் காலில் தடுத்து நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 12 ஆம் வகுப்புக்குச் செல்ல உள்ளார். அந்த சிறுமிக்கும் திண்டிவனம் பகுதியை சேர்ந்த 23 வயது ராஜீவ்காந்தி என்ற இளைஞருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அந்த திருமணத்தில் சிறுமிக்கு சம்மதம் இல்லையாம். அதனால் குழந்தை தடுப்புச் சட்டம் புகார் எண் 1098க்கு கால் செய்த அந்த சிறுமி தனக்கு விருப்பமில்லாத திருமணத்தை நடத்த பெற்றோர்கள் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அதனைத் தடுத்து நிறுத்துமாறும் கூறியுள்ளார்.
அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போளூர் போலீசார், அந்த மாணவியை மீட்டுள்ளனர். இதனை அறிந்து மணமகனின் பெற்றோர் அங்கிருந்து எஸ்கேப் ஆக்கியுள்ளனர். இதனையடுத்து அந்த மாணவியை அதிகாரிகள் திருவண்ணாமலை அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.