பாபநாசம் அணையில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு!
கடையநல்லூர் அருகே கோவிலுக்கு கோதானம் வழங்க சென்ற மாணவர் அணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சுபேதார் பகுதியில் வசித்து வரும் தம்பதி வைத்திலிங்கம்- பொன்னுகிளி. இவர்களது மகன் மணிகண்டன் (18). நேற்று காலை வைத்திலிங்கம் தனது குடும்பத்தினருடன் பாபநாசம் கோவிலுக்கு சென்றிருக்கிறார். அங்கு வைத்திலிங்கம் தனது வேண்டுதலை நிறைவேற்ற பசு ஒன்றை தானமாக வழங்கியிருக்கிறார்.
அதன் பிறகு மணிகண்டன், அங்கிருந்த அணையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத வகையில் தண்ணீரில் மூழ்கிய மணிகண்டன் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். ஆனால், அக்கம் பக்கத்தினர் நீரில் இறங்கி அவரை மீட்பதற்குள் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.