‘ஆன்லைன் – தொலைக்காட்சி வகுப்புகளை நிறுத்துங்கள்’ ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் சூழலில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க முடியாத சூழல். இந்நிலையில் தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தத் தொடங்கிவிட்டன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தவுள்ளது. இந்த இரண்டு வகை கற்பித்தலையுமே நிறுத்த வேண்டும் என ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் அறிக்கையில், ‘தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமையில் 16 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் பிரதிநிதிகள் கொண்ட அந்த குழுவில் அரசுப் பள்ளிகளின் பிரதிநிதிகள் சேர்க்கபடவில்லை. இந்தக் குழு தனது இறுதி அறிக்கையை கொடுப்பதற்கு முன்னரே தமிழக அரசு வெளியிட்டுவரும் அறிக்கைகள் பள்ளிகள் திறப்பது குறித்தும், பாடத்திட்டம் குறித்தும் மாநில அரசிடம் தெளிவான திட்டங்கள் இல்லை என்பதையே வெளிக்காட்டுகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் (14-07-2020) தமிழக முதல்வர் அவர்கள் தொலைக்காட்சி வழி கல்வியைத் துவங்கி வைத்துள்ளார். மேலும் இன்று (15-07-2020) முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை வினியோகிப்பதுடன் அவர்களுக்கான வீடியோ பாடங்களும் மடிக்கணிணி அல்லது பென்டிரைவ்-ல் பதிவிறக்கம் செய்து தரப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தமிழக அரசு மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பகுதியினரிடம் மடிக்கணிணி கிடையாது. பென்டிரைவ்-ல் பதிவிறக்கம் செய்யப்பட்ட பாடங்களை படிப்பதற்கான கணிணி உள்ளிட்ட எந்தவிதமான வசதிகளும் கிடையாது. கணிணி அல்லது தொலைக்காட்சி மட்டுமல்ல குடியிருப்பதற்காக முறையான வீடுகள் கூட இல்லதவர்களாகத்தான் பல லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் இருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போண் வாங்க இயலாததால் மாணவன் பிரதீப் தற்கொலை செய்துள்ளது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இந்நிலையில் யாரை திருப்தி படுத்துவதற்காக இணையவழி அல்லது தொலைக்காட்சி வழி வகுப்புகளை தமிழக அரசு நடத்த முயற்சிக்கிறது.
திட்டமிடப்படாத கொரோனா எதிர்ப்புப் பணிகளால் தலைநகர் சென்னை விழிபிதுங்கி நிற்கிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில் மட்டுமே பதட்டத்தை உருவாக்கிய வைரஸ் பரவல் இன்று ஒட்டுமொத்த தமிழகத்தையே பதட்டத்திற்குள்ளாக்கியுள்ளது. இணையவழி அல்லது தொலைக்காட்சி வழியாக கல்வி கற்பதற்கான உபகரணங்கள் இருக்கிறதா என்பது மட்டுமல்ல, கல்வி கற்பதற்கான மனநிலை மற்றும் சூழல் இருக்கிறதா என்பதும் மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய அம்சமாகும். கெடு வாய்ப்பாக தமிழக அரசோ அல்லது பள்ளிக்கல்வித் துறையோ இதுகுறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
தமிழகத்திலுள்ள பெரும்பகுதி தனியார் பள்ளிகள் பல்வேறு செல்போண் செயலிகள் மூலம் இணையவழி வகுப்புகளை நடத்திவருகின்றன. இதற்காக ஆண்ட்ராய்டு போண் இல்லாத ஏழை பெற்றோர்கள் கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாத சூழலிலும் பல ஆயிரங்கள் செலவு செய்து அத்தகைய செல்போண்களை வாங்க நிர்பந்திக்கப்பட்டார்கள். இணையதள சேவைக்காக அதிகமான தொகையை செலவு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஆனாலும், இத்தகைய வகுப்புகளில் மாணவர்களை முழுமையாக பங்கெடுக்கவைக்க இயலவில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது. காரணம் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை வசூலிப்பதற்கு செலுத்திய கவனத்தில் சிறுபகுதியைக்கூட மாணவர்களை பங்கெடுக்க வைப்பதில் செலுத்தவில்லை.
இத்தகைய சூழலில்தான் குறைந்தபட்ச தயாரிப்புப் பணிகளைக்கூடச் செய்யாமல் தொலைக்காட்சி வழி மற்றும் வீடியோ பாடங்கள் வழியான கல்வியை தமிழக அரசு துவங்கியுள்ளது. ஏற்றத்தாழ்வான சமூகத்தில் இத்தகைய அதிரடியான திட்டங்கள் பலன்தராது என்பதை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கை மாணவர்களுக்கு எந்தவகையிலும் பலன் தராது என்பது மட்டுமல்ல, அவர்களை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிப்பிற்குள்ளாக்கும். எனவே, இணையவழி அல்லது தொலைக்காட்சி வழி வகுப்புகளை நடத்தும் முயற்சிகளை தமிழக அரசு உடனடியாகக் கைவிடவேண்டும். மேலும், தமிழக மாணவர்களின் நலன் மற்றும் வாய்ப்புகளை முழுமையாகக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ற வகையில் வகுப்புகளை நடத்திட திட்டமிடவேண்டுமென தமிழக அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.