ஸ்டாலினை கிண்டல் செய்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

 

ஸ்டாலினை கிண்டல் செய்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

கோவையில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும், திமுக முதலமைச்சர் வேட்பாளராக ஸ்டாலினும் அறிவிக்கப்பட்டு, இரு கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளை சமூக வலைதளங்கள் மூலமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்டாலினை கிண்டல் செய்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

இந்நிலையில், கோவை காந்திபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ஸ்டாலினை இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியாகவும், துரை முருகனை மங்குனி அமைச்சராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் தன்னம்பிக்கை மிக்க தலைமையா?, துண்டுச்சீட்டு தலைமையா? என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று, மற்றொரு சுவரொட்டியில் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி மற்றும் எடப்பாடி பழனிசாமி படத்துடன் உழைப்பை நம்பலாமா?, பிறப்பை நம்பலாமா? என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டலடித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள், எந்த அமைப்பின் சார்பாக ஒட்டப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில் காந்திபுரம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை காட்டூர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.