கொரோனா பரவலை தடுக்க லாக்டவுனை தொடர்ந்து நீட்டிக்கும் மாநில அரசுகள்
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், உத்தர காண்ட், ஆந்திரா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் கோவிட் லாக்டவுனை குறைந்தபட்சம் ஒருவாரம் முதல் 2 வாரம் வரை நீட்டித்துள்ளன
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை மேலும் குறைக்கும் நோக்கில் மாநிலங்கள் லாக்டவுனை (ஊரடங்கு) நீட்டித்து வருகின்றன.
அந்த வகையில் உத்தரகாண்ட் அரசு ஊரடங்கை இன்று முதல் மே 25ம் தேதி மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. அதேசமயம் ரேஷன் கடைகள், பேக்கரி மற்றும் கடைகள் காலை 7 மணி முதல் காலை 10 மணி திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 20 பேர் பங்கேற்க உத்தரகாண்ட் அரசு அனுமதி அளித்துள்ளது.
அதேபோல் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் 25ம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஆந்தி பிரதேச அரசு கோவிட் ஊரடங்கை வரும் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது. குஜராத்தில் முதல்வர் விஜய் ருபானி தலைமையிலான பா.ஜ.க. அரசு அம்மாநிலத்தில் இரவு ஊரடங்கை நேற்று முதல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. தற்போது அம்மாநிலத்தில் 36 நகரங்களில் இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. அம்மாநில அரசு சில பகல்நேர கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.