மாட்டு சிறுநீர் பினாயிலை பயன்படுத்த மத்திய பிரதேச அரசு உத்தரவு!
பாஜக ஆளும் மாநிலங்களில் பசு சாணம், கோமியம் போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அவை மிக சிறந்த கிருமிநாசினி என பாஜகவினர் கூறி வருகின்றனர். இதையொட்டி கோமியம் மூலம் பினாயில் தயாரிக்கும் பணியை அரசு ஊக்குவித்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக பினாயில் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கோமியத்தை மத்தியப் பிரதேச அரசின் விலங்குகள் நலத்துறை வழங்கியுள்ளது. இதன்மூலம் இனி பால் கொடுக்காத மாடுகளை மக்கள் கைவிடமாட்டார்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு கோமியத்தின் மூலம் தயாரிக்கப்படும் பினாயிலை மட்டுமே அரசு அலுவலகங்களில் பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. பொது நிர்வாகத்துறை செயலாளர் நிவாஸ் சர்மா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கெமிக்கல் பினாயிலுக்கு பதிலாக மாட்டு சிறுநீர் பினாயில் மூலமே அரசு அலுவலகங்கள், வளாகங்களை சுத்தப்படுத்த வேண்டும். முன்னதாக மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களை பாதுகாப்பதற்காக நாட்டிலேயே முதல்முறையாக பசு அமைச்சரவை என தனியாக ஒன்று உருவாக்கப்பட்டது குறிப்பிடதக்கது.