இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதல் – தந்தை, மகன் உயிரிழப்பு!
கோவை
மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் புளியம்பட்டி தேரன்நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் சஞ்சீவ்(26). இவருக்கு துர்கா(24) என்ற மனைவியும், புவிதரன்(5) மற்றும் காவியா(2) என 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் சஞ்சீவ், நேற்று மாலை மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
சிறுமுகை அருகேயுள்ள இரும்பரை இட்டர்பாளையம் பகுதியில் சென்றபோது சஞ்சீவின் வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசுப்பேருந்து மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த சஞ்சீவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். துர்கா மற்றும் குழந்தைகள் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துர்கா மற்றும் குழந்தைகளை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவன் புவிதரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.