தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஆக.15 வரை நீட்டிப்பு

 

தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஆக.15 வரை நீட்டிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. ரயில்களில் அதிகமாகப் பயணிகள், பயணிப்பார்கள் என்பதால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்டதில் இருந்தே 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஜூன் 30 ஆம் தேதி வரை அனைத்து விரைவு, பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படும் என ரயில்வே அறிவித்தது.

தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஆக.15 வரை நீட்டிப்பு

இருப்பினும், குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் சிறப்பு ரயில்களை ரத்து செய்யுமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்ததின் பேரில், கோவை -காட்பாடி, மதுரை- விழுப்புரம், திருச்சி -நாகர்கோவில், கோவை -மயிலாடுதுறை உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் ஜூலை 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இந்த தடை இன்றோடு முடிவடைகிறது. இந்த நிலையில், சிறப்பு ரயில்களுக்கான தடை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருச்சி-செங்கல்பட்டு, மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, அரக்கோணம்-கோவை, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோவில் இடையேயான சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன