சூரரைப்போற்றுக்கு தடையில்லா சான்றிதழை வழங்கியது விமானப்படை! எப்போது ரிலீஸ்?

 

சூரரைப்போற்றுக்கு தடையில்லா சான்றிதழை வழங்கியது விமானப்படை! எப்போது ரிலீஸ்?

சூரரைப்போற்று திரைப்படத்திற்கான தடையில்லா சான்றிதழை விமானப்படை வழங்கியது.

இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வாழ்க்கை வரலாறு படமல்ல.

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தில் விமானப்படை தொடர்பான காட்சிகள் வருவதால் படத்தை வெளியிட இந்திய விமானப்படையிலிருந்து தடையில்லா சான்றிதழ் கிடைக்க வேண்டும். சான்றிதழ் இன்னும் கிடைக்காததால் படம் தாமதமாக வெளியாக வாய்ப்பிருப்பதாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை வாயிலாக வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு தடையில்லாச் சான்றிதழ் விமானப்படையால் கையெழுத்தாகியுள்ளது. இருந்தபோதிலும் திட்டமிட்டபடி அக்டோபர் 30-ஆம் தேதி சூரரைப்போற்று வெளியாகாது எனவும் தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.