மின்வேலியில் சிக்கி மகன் மரணம்… அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு!

 

மின்வேலியில் சிக்கி மகன் மரணம்… அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே மகன் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த செய்தி கேட்டு, அதிர்ச்சியில் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகேயுள்ள மேலந்தல் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரது மகன் காசிநாதன். விவசாயி. இவர் நேற்று அதிகாலை தனது விவசாய தோட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது, அவரது நிலத்தின் அருகேயுள்ள பாஸ்கர் என்பவரது தோட்டத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கிக் கொண்ட காசிநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

மின்வேலியில் சிக்கி மகன் மரணம்… அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு!

இதனிடையே, மின்வேலியில் சிக்கி காசிநாதன் உயிரிழந்ததை அறிந்த பாஸ்கர், அவரது உடலை புதருக்குள் மறைத்து வைத்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளார். மகன் உயிரிழந்ததாக செய்தியை கேட்ட சுப்ரமணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

மகன் – தந்தை என அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்த நிலையில், காசிநாதன் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய பாஸ்கர், நேற்றிரவு மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில் போலீசார், காசிநாதனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.