‘அன்பாகப் பேசி’ பயங்கரவாதியை சரணடைய வைத்த ராணுவ வீரர்கள்: வைரல் வீடியோ!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவரை, பாதுகாப்பு படையினர் அன்பாக பேசி சரண் அடையச் செய்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பயங்கரவாதி ஒருவர் தாமாக முன்வந்து பாதுகாப்புப் படையினரிடம் சரண் அடைவது போன்ற வீடியோ ஒன்றை ராணுவம் வீடியோவாக வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோவில், ஒரு தோட்டத்தில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதியை பாதுகாப்பு வீரர் ஒருவர் பாசமாக பேசி சரண் அடையச் சொல்கிறார். யாரும் உங்களை சுட மாட்டார்கள் எனக் கூறி சக வீரர்களுக்கும் அவரை சுடக்கூடாது என கட்டளையிடுகிறார்.
இதனையடுத்து, அந்த பயங்கரவாதி தாமாக வந்து சரண் அடைந்த நிலையில், அவருக்கு தண்ணீர் கொடுக்கும் படி ராணுவ வீரர் கூறுகிறார். அவரிடம் ராணுவ வீரர்கள் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 13ம் தேதி ஜம்மு காஷ்மீரில் சிறப்பு காவல் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதும், சம்பவத்தில் இருந்து காணாமல் போன சடூராவைச் சேர்ந்த ஜஹாங்கிர் ஆ பட் என்பவர் தான் சரண் அடைந்த பயங்கரவாதி என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த இளைஞர் பயங்கரவாதத்தில் இணைந்தார் என்றும் தற்போது அவர் திருந்தி சரண் அடைந்திருக்கிறார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதி ஜஹாங்கிர் ஆ பட் சரண் அடைந்த போது அங்கிருந்த அவரது தந்தை, வீரர்கள் பேசியதால் அவர் சரண் அடைந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மீண்டும் அவரை பயங்கரவாதத்திற்கு அனுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.