மாலை தமிழகம் வருகிறது..லடாக் தாக்குதலில் வீர மரணம் அடைந்த பழனியின் உடல்!
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் நேற்று இரவு இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு படை வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். உயிரிழந்த அந்த 2 படை வீரர்களுள் ஒருவர் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்று தெரிய வந்தது. அந்த தாக்குதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தை சேர்ந்த பலர் படுகாயம் அடைந்த நிலையில் சீன ராணுவத்தில் 43 பேர் உயிரிழந்து விட்டதாகவும் இந்திய ராணுவத்தில் மொத்தமாக 20 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதனைத்தொடர்ந்து தாக்குதலில் படுகாயம் அடைந்த மேலும் 4 வீரர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் வீர மரணம் அடைந்த பழனியின் உடல் இன்று மாலை தமிழகம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ விமானம் மூலம் வீரர் பழனியின் உடல் மதுரை வருவதாகவும் அவரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் வினய்யும் , அமைச்சர்களும் மரியாதை செலுத்த உள்ளனர். வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு முதலமைச்ச்ர ரூ.20 லட்சம் நிவாரண உதவி அளிப்பதாகவும் தகுதி அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.