மலேசியாவில் இருந்து வந்த கடத்தல் தங்கம்! திருச்சி ஏர்போர்ட்டில் 4 பேர் சிக்கினர்

 

மலேசியாவில் இருந்து வந்த கடத்தல் தங்கம்! திருச்சி ஏர்போர்ட்டில் 4 பேர் சிக்கினர்

மலேசியாவில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த 4 பேர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 773 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் 177 பயணிகளுடன் கடந்த 8-ம் தேதி திருச்சிக்கு இரவு 7.40 மணிக்கு வந்தது. பயணிகள் அனைவரையும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 4 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தனியாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் நகை வடிவிலும், பசை வடிவிலும் தங்கத்தை தங்கள் உடலில் மறைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் சிவகங்கையை சேர்ந்த பாஸ்கர், ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் நூருல், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த ராஜா, மானாமதுரையை சேர்ந்த உதயன் என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 773 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், பாஸ்கர், நூருல் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள், மற்ற 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் பசை வடிவில் இருந்ததால், அதை திருச்சி பெரியகடை வீதியில் உள்ள 2 பொற்கொல்லர்களிடம் கொடுத்து தங்கம் பிரித்து எடுத்து மதிப்பீடு செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 24 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.