பெண்கள் அலட்சியம் காட்டும் 6 புற்றுநோய் அறிகுறிகள்!

 

பெண்கள் அலட்சியம் காட்டும் 6 புற்றுநோய் அறிகுறிகள்!

உலக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் தொற்றா நோய்களில் புற்றுநோய் முக்கியமானது. உலகில் ஏற்படும் மூன்றில் ஒரு புற்றுநோய் உயிரிழப்புகள் உடல் எடை கட்டுக்குள் வைக்காதது, குறைந்த அளவு காய்கறி பழங்கள் எடுத்துக்கொள்வது, உடல் உழைப்பு குறைவு, புகையிலை மற்றும் மது பழக்கம் காரணமாக நிகழ்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

பெண்கள் அலட்சியம் காட்டும் 6 புற்றுநோய் அறிகுறிகள்!

அதிலும் குறிப்பாக பெண்கள் என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என இரண்டு மிகப்பெரிய உயிர்க் கொல்லிதான் உள்ளது. இவற்றின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளைப் பெண்கள் கவனிக்கத் தவறுவது மற்றும் புறக்கணிப்பதுதான் அதிக உயிரிழப்புக்குக் காரணமாகிவிடுகிறது என்கின்றன ஆய்வுகள்.

அப்படி பெண்கள் தவிர்க்கும், அலட்சியம் காட்டும் ஆறு அறிகுறிகளைப் பற்றிக் காண்போம்!

1. இயல்புக்கு மீறிய ரத்தப் போக்கு

பெண்களுக்கு மெனோபாஸ் வருவதற்கு முன்பு  அதிகமாக ரத்தப் போக்கு இருக்கும். அது மட்டுமின்றி மாதவிலக்கு காலத்தில் அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு இருந்தால் அது பற்றி மருத்துவரிடம் கலந்தாலோசனை செய்ய வேண்டும். அளவுக்கு அதிகமான ரத்தப் போக்கு  கர்ப்பப்பை, சினைப்பை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கூட காரணமாக இருக்கலாம்.

2. வெள்ளைப்படுதல்

பெண்கள் பிறப்புறுப்பில் சில வகையான திரவம் சுரக்கிறது. சிறிய அளவில் சுரப்பு இயல்பானதே. ஆனால் அது அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, துர்நாற்றம் அடிக்கும் போது அது பற்றி மருத்துவர்களின் ஆலோசனை பெற வேண்டியது கட்டாயம்.

பெண்கள் அலட்சியம் காட்டும் 6 புற்றுநோய் அறிகுறிகள்!

3. மார்பகத்தில் மாற்றம்

மார்பகத்தை அவ்வப்போது அழுத்தி அதில் கட்டி போல எதுவும் வந்துள்ளதா என்பதை பெண்கள் ஆய்வு செய்ய வேண்டும். மார்பகத்தில் மாற்றம், புண், இயல்புக்கு மீறிய கசிவு என இருந்தால் உடனடியாக மார்பகத்தை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் சுய மார்பக பரிசோதனையை பெண்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும்.

4. திடீர் உடல் எடை குறைவு மற்றும் சோர்வு

உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என எதுவுமின்றி திடீரென்று உடல் எடை குறைகிறது, அதிகப்படியான சோர்வு ஏற்படுகிறது என்றால் அதை அலட்சியமாக விடக்கூடாது.

5. சிறுநீர்ப்பை, மலக்குடலில் ஏதோ அழுத்தம் ஏற்பட்டு மலம் கழித்தல், சிறுநீர் கழித்தலில் சிரமம், மாறுதல் ஏற்பட்டால் அதை அப்படியே விட்டுவிடக் கூடாது. சிறுநீர், மலம் கழிக்கும் போது ரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். அது சினைப்பைப் புற்றுநோயின் பாதிப்பாகக் கூட இருக்கலாம்.

6. இடுப்பு, அடி வயிற்றில் தீராத வலி இருந்தால் எதனால் இந்த வலி ஏற்பட்டது என்பதைக் கண்டறிய வேண்டும். செரிமானக் கோளாறு என்று பலரும் இதைப் பொருட்படுத்துவதே இல்லை. 15 நாட்களுக்கு மேலும் வலி நீடித்தால் மருத்துவர் உதவியை நாடுவது அவசியம்.