வாட்ஸ்அப்புக்கு குட்பை சொல்லும் பயனர்கள்… டெலிகிராம், சிக்னலுக்கு ஜாக்பாட்… ட்வீட்டால் ட்விஸ்ட் அடித்த மஸ்க்!

 

வாட்ஸ்அப்புக்கு குட்பை சொல்லும் பயனர்கள்… டெலிகிராம், சிக்னலுக்கு ஜாக்பாட்… ட்வீட்டால் ட்விஸ்ட் அடித்த மஸ்க்!

வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை அளித்த அச்சத்தால் பெரும்பாலான பயனர்கள் சிக்னல், டெலிகிராம் செயலிக்குத் தாவியிருக்கிறார்கள். இந்தத் தாவலின் மூலகர்த்தாவாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் செய்த ஒற்றை ட்வீட் அமைந்துள்ளது.

சில வாரங்களாக வாட்ஸ்அப் செயலியைத் திறந்தவுடன் ஒரு நோட்டீஸ் வருவதைப் பார்த்திருப்பீர்கள். அதில், ஓகே (agree) கொடுக்காவிட்டால் பிப்ரவரி 8ஆம் தேதியோடு வாட்ஸ்அப் சேவையைப் பெற முடியாது என்ற தகவல் இருந்திருக்கும். இந்த நோட்டீஸின் மூலம் தங்களின் பயன்பாட்டு விதிகளையும் பயனர்களின் தனியுரிமைக் கொள்கையும் (Privacy policy) மாற்றியமைத்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருந்தது.

நோட்டீஸில் பேஸ்புக் போன்ற மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு (third party apps) பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் பகிரப்படும் என்று குறிப்பிட்டிருந்தது இணைய உலகில் பேசுபொருளாகியுள்ளது. வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கையின் இந்தப் புதிய மாற்றம் அதன் பயனர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இதற்கு முன்பு பயனர்கள் செய்யும் மெசெஜ்கள் அனைத்தும் end-to-end-encryption முறைப்படி பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ்அப் உறுதியளித்திருந்தது.

வாட்ஸ்அப்புக்கு குட்பை சொல்லும் பயனர்கள்… டெலிகிராம், சிக்னலுக்கு ஜாக்பாட்… ட்வீட்டால் ட்விஸ்ட் அடித்த மஸ்க்!

தற்போது அது கேள்விக்குறியாகியிருப்பதாகக் கூறி வாட்ஸ்அப்பிலிருந்து வெளியேற அதன் பயனர்கள் முடிவெடுத்துள்ளனர். அதற்கான மாற்றையும் தேட துவங்கியிருக்கிறார்கள். பயனர்களிடம் கிளம்பிய எதிர்ப்பையடுத்து வாட்ஸ்அப் விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக வாட்ஸ்அப், ”ஏற்கனவே இருந்த end-to-end-encryption உள்ளிட்ட தனியுரிமைக் கொள்கையில் மாற்றம் இருக்காது. பழைய முறைப்படியே பயனர்களின் தனிப்பட்ட மெசெஜ்கள் பாதுகாக்கப்படும். அதில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போதைய மாற்றம் business account வைத்திருப்பவர்கள் மட்டுமே” என்று கூறியிருக்கிறது.

இருப்பினும், வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் மூலம் அச்சத்திலுள்ள பயனர்கள் மாற்றத்தை நோக்கி சென்றிருக்கின்றனர். புதிய அப்டேட்டால் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு backfire ஆகியிருக்கிறது. வாட்ஸ்அப்பின் இந்தச் சறுக்கலை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது சிக்னல் செயலி (Signal app).

வாட்ஸ்அப் பயனர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கத்தில் தொடர்ச்சியாக விளம்பரம் செய்துவருகிறது. வாட்ஸ்அப் செயலிலிருந்து எப்படி விலகுவது என்பதற்கான வழிகாட்டியை வெளியிட்டு அந்நிறுவனத்தின் தற்போதைய ஓனர் மார்க் சக்கர்பெர்க்கை வெறுப்பேற்றியிருக்கிறது.

இதன் உச்சமாக, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், “சிக்னல் செயலியைப் பயன்படுத்துங்கள்” என்று ட்விட்டர் மூலம் பரிந்துரைத்திருக்கிறார். வாட்ஸ்அப் பயனர்களின் தரவுகளைப் பேஸ்புக்கிற்கு தாரைவார்ப்பதால் அனைவரும் சிக்னல் செயலியைப் பயன்படுத்துங்கள் என்று மஸ்க் மறைமுகமாக இந்த ட்வீட்டில் கூறுகிறார் என அவரது பாலோவர்கள் இதற்கு விளக்கம் கொடுத்தார்கள்.

எலான் மஸ்க்கின் ட்வீட்டால் சிக்னல் செயலிக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. (அடடா உங்கள் கைகள் அற்புதம் செஞ்சிருச்சே) ஒரு ட்வீட் என்ன செய்யும் என்பதைக் கண்முன்னே நிகழ்த்திக் காட்டிவிட்டார் மஸ்க். ஆம், ஆப்பிள் பிளே ஸ்டோர் டாப் சார்ட்டில் முதல் இடத்தை சிக்னல் பிடித்திருக்கிறது. இது வாட்ஸ்அப் பயனர்கள் அனைவரும் சிக்னலுக்குத் தாவியிருக்கிறார்கள் என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது.

இதனால் சிக்னல் நிறுவனமே திக்குமுக்காடிப் போயிருக்கிறது என்று சொல்வதே சரியாக இருக்கும். உலகில் மிகச் சொற்பமான மக்கள் மட்டுமே இதனைப் பயன்படுத்திவந்தார்கள். அதனால் குறைவான ஆட்களைக் கொண்டே இந்நிறுவனம் செயல்பட்டுவந்தது.

இதனால் புதிய பயனர்கள் அதிகளவில் சிக்னலில் இணைய முயற்சி செய்தபோது, அவர்களுக்கான verification code அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்தச் சிக்கல் தீர்க்கப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சிக்னல் செயலி, பயனர்களின் தனியுரிமைக் கொள்கைக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கிறது. குறிப்பாக, பயனர்களின் தரவுகள் எதுவும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்குப் பகிரப்படாது. இத்தகைய சிறம்பம்சங்களைக் கொண்டுள்ளதால் உலகிலுள்ள ஊடகவியலாளர்கள், பாதுகாப்பு ஆலோசகர்கள், கல்வியாளர்களால் சிக்னல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிக்னலைப் போல மற்றொரு செயலியான டெலிகிராம் மீதும் பயனர்களின் பார்வை விழுந்துள்ளது. சிக்னலைப் போல் அல்லாமல் டெலிகிராம் நன்கு பரிட்சயப்பட்ட ஒரு செயலியாகும். வாட்ஸ்அப் பயன்படுத்துவோர்களில் பெரும்பாலோனோர் டெலிகிராமையும் சைடில் வைத்திருப்பார்கள்.

ஏனென்றால், மிகப் பெரிய (upto 2GB) மீடியா ஃபைல்களை அதன்மூலம் அனுப்பலாம். தற்காலிகமாக இதனைப் பயன்படுத்தியவர்கள் இனி நிரந்தரமாக அங்கேயே குடியேறி விடலாம் என்ற எண்ணம் பயனர்களிடையே பரவலாக ஏற்பட்டுள்ளது.

இணையச் சந்தையில் தனக்குப் போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதற்காக போட்டி நிறுவனங்களை (வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்) தனதாக்கிக் கொண்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்குக்கு தலைவலியாக சிக்னல் களமிறங்கியிருக்கிறது. ஒரு ட்வீட் மூலம் மார்க்குக்கு ட்விஸ்ட் அடித்திருக்கிறார் மஸ்க். எல்லா புகழும் எலான் மஸ்குக்கே!