பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவதான் தேவகவுடா கட்சி போட்டியிடவில்லை… சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடக இடைத்தேர்தல்களில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவும் நோக்கில்தான் மதச்சார்ப்பற்ற ஜனதா தள கட்சி போட்டியிடவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவகவுடா பேட்டி ஒன்றில், தேர்தலுக்கு எங்களிடம் பணம் இல்லை. அதனால் பெல்காவி மக்களவை தொகுதி, மாஸ்கி, சிந்தகி மற்றும் பசவ கல்யாண் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மதசார்ப்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை நிறுத்தாது என்று தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ, தேவகவுடாவின் அறிக்கை பா.ஜ.க.-மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டு நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது.
ஹூப்ளியில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது; வடக்கு கர்நாடகாவின் பெல்காவி, மாஸ்கி, சிந்தகி மற்றும் பசவ கல்யாண் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு அதிக பலம் இல்லை.
இருப்பினும், பா.ஜ.க.வுக்கு தங்களால் இயன்ற சிறிய வழியில் உதவ அநேகமாக எந்தவொரு வேட்பாளரையும் அவர்கள் களமிறக்காமல் இருக்கலாம். காங்கிரஸை பொறுத்தவரை இந்த தேர்தல்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் இந்த திடீர் முடிவால் அந்த கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே வளர்ந்து வரும் நல்லுறவு ஊகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.