வரும் 6 ஆம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடக்கம்

 

வரும் 6 ஆம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடக்கம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மக்கள் பணிக்கு செல்ல இயலாததால், பல தொழில் நிறுவனங்கள் முடங்கின. குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில் திரைத்துறையும் முடங்கியதால், அதனை சார்ந்த தொழிலாளர்களின் நிலை கேள்விக் குறியானது. இந்த இக்கட்டான சூழலில் அவர்களுக்கு நடிகர்களும், நடிகைகளும் நிதியுதவி அளித்தனர். முக்கியமாக கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் கடந்த 70 நாட்களுக்கு மேலாக சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன

வரும் 6 ஆம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடக்கம்
இந்த நிலையில் தமிழக அரசு 60 தொழிலாளர்களைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று அனுமதி கொடுத்தது. இதையடுத்து ஷூட்டிங் தொடங்குவதற்கான வேலைகளை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் செய்துவந்தது. மேலும் படப்பிடிப்பை எவ்வாறெல்லாம் முன்னெச்சரிக்கையுடன் நடத்தலாம் என்றும் பெப்சி அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து வரும் 6 ஆம் தேதியில் இருந்து சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்பை நடத்த சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது. 6-ம் தேதி 2 சீரியல்களின் ஷூட்டிங் தொடங்கும் நிலையில் 8-ம் தேதி மற்ற சீரியல்களின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.