கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்…
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலையில் காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவருமான விளங்கியவர் அகமது படேல். 71 வயதான அகமது படேலுக்கு கடந்த மாதம் 1ம் தேதியன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்து கொண்டார் மேலும் தன்னிடம் நெருங்கி தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்வதோடு தனிமைப்படுத்தி கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார்.
இந்த சூழ்நிலையில் கடந்த 15ம் தேதியன்று குருகிராமில் உள்ள மெதாந்த மருத்துவமனையில் அகமது படேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் இன்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் பலத்த அதிர்ச்சி மற்றும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அகமது படேல் இறந்த செய்தியை அவரது மகன் பைசல் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பைசல் டிவிட்டரில், ஆழந்த வருத்தத்தோடும், துக்கத்தோடும், எனது தந்தையின் சோகமான மற்றும் அகால மரணத்தை அறிவிக்க வருத்தப்படுகிறேன். திரு அகமது படேல் 25-11-2020 காலை 3.30 மணிக்கு மரணம் அடைந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு அவருக்கு கோவிட்-19 உறுதியான பின் அவரது பல உறுப்புகள் செயலிழப்புகள் காரணமாக அவரது உடல் நிலை மோசமடைந்தது. அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தாஸை வழங்குவார், இன்ஷல்லா என்று டிவிட் செய்துள்ளார். வெகுஜன கூட்டங்களை தவிர்ப்பதன் மூலம் கோவிட்-19 விதிமுறைகளை பின்பற்றுமாறு அவர்களின் நலம் விரும்பிகள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். எல்லா நேரங்களிலும் சமூ இடைவெளியை பராமரிக்கவும் என்று பதிவு செய்து இருந்தார்.