டிசம்பர் 10 தாக்குதல் எதிரொலி… பா.ஜ.க.வின் விஜயவர்கியாவுக்கு புல்லட் புரூப் கார் கொடுத்த உள்துறை அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல் சம்பவம் நடந்தன் எதிரொலியாக, பா.ஜ.க.வின் கைலாஷ் விஜயவர்கியாவுக்கு புல்லட் புரூப் காரை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. இதற்கான பணிகளிலும் அந்த கட்சி தீவிரமாக இறங்கி செய்து வருகிறது. பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கைலாஷ் விஜயவர்கியா மேற்கு வங்க பா.ஜ.க.வின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். அவர் தற்போது மேற்கு வங்கத்தில் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில் அண்மையில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா 2 நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்கம் சென்று இருந்தார். கடந்த 10ம் தேதியன்று டைமண்ட் ஹார்பர் பகுதியில் கட்சி தொண்டர்களை சந்திப்பதற்காக ஜே.பி. நட்டாவுடன் கைலாஷ் விஜயவர்கியா சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஜே.பி. நட்டாவுக்கு எந்தவித பாதிப்பு இல்லை. அதேசமயம், கைலாஷ் விஜயவர்கியா பயணம் செய்த காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மேலும் அவருக்கும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து கைலாஷ் விஜயவர்கியாவின் பாதுகாப்பு மேம்படுத்தியதுடன், அவருக்கு குண்டு துளைக்காத (புல்லட் புரூப்) காரையும் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளதாக தகவல். கைலாஷ் விஜயவர்கியாவுக்கு தற்போது இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற விஜயவர்கியா இது குறித்து கூறுகையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, எனக்கு குண்டு துளைக்காத வாகனம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.