கோவை அருகே காட்டுயானை தாக்கி காவலாளி பலி!

 

கோவை அருகே காட்டுயானை தாக்கி காவலாளி பலி!

கோவை

கோவை மாவட்டம் பேரூர் அருகே காட்டுயானை தாக்கி தனியார் நிறுவன காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பேரூர் பச்சாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (65). இவர் செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காவலாளி ஆக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை இயற்கை உபாதையை கழிப்பதற்காக மலை அடிவார பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த ஒற்றை காட்டு யானை காவலாளி முத்துச்சாமியை சராமாரியாக தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை அருகே காட்டுயானை தாக்கி காவலாளி பலி!

அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சத்தம் எழுப்பி யானையை விரட்டி அடித்தனர். பின்னர், இதுகுறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், இறந்த முத்துச்சாமியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், பிரேத பரிசோதனைக்காக உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர். காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் பேரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.