60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய்கள் உள்ளவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி..
60 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் மற்றும் இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடும பணி தொடங்குகிறது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக நாடு முழுவதும் முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்தது. தற்போது 2-வது கட்டமாக இன்று (மார்ச் 1-ம் தேதி) முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
இணைநோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 59 வயதுக்கு உட்பட்டவர்களில் நீரிழிவு நோய்கள், கடந்த ஓர் ஆண்டாக இதயக்கோளாறு நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்ட 20 இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் 60 வயதுக்கு மேற்பட்டோர் தங்களின் ஆதார்கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். இணை நோய்கள் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் ஒருவரிடம் தனக்கிருக்கும் இணை நோய்கள் குறித்த சான்றிதழ் பெற்றுவந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போடப்படுகிறது. இதில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. அதேசமயம் தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 செலுத்தி கொரோனா தடுப்பூசிகளை மக்கள் போட்டுக்கொள்ளலாம்.