’1 மீட்டர் இடைவெளியில் மாணவர்களுடன் பள்ளிகள் திறப்பு’ இலங்கை அரசு அறிவிப்பு
கொரொனா பாதிப்பு கடந்த வருடம் டிசம்பர் மாத வாக்கில் சீனாவில் தொடங்கியது. அங்கிருந்து உலக நாடுகள் பலவற்றிற்கும் இதன் பாதிப்பு அலை பரவியது.
இதையொட்டி, அந்தந்த நாடுகளின் பாதிப்புகளை ஒட்டி, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்தியாவில் கடந்த மார்ச் மாத இறுதியில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் லாக்டெளன் காலம் நீட்டிப்பில்தான் உள்ளது. அதனால் பள்ளி திறக்கும் தேதியை உத்தேசமாகக் கூட கணிக்க முடியவில்லை.
ஆனால், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நாடுகள் படிப்படியாக தங்கள் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கும் முடிவினை அறிவித்து வருகின்றன.
இங்கிலாந்து நாட்டில் அடுத்த மாதம் (செப்டம்பர்) பள்ளிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து இயங்கத் தொடங்கும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ‘நீண்ட காலம் பள்ளிகள் திறக்காமல் இருப்பது மாணவர்களுக்கு நல்லதல்ல’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் பள்ளிகள் திறக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நாட்டிலும் இந்தியாவைப் போலவே மார்ச் மாதம் முதல் பள்ளிகள் இயங்க வில்லை.
தற்போது இலங்கையில் கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் உள்ளது. ராஜபக்ஷே கட்சி அங்கு வெற்றிவாகை சூட இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இதனால், பள்ளிகளைத் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
200 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் இரு மாணவர்களுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளியுடன் பள்ளிகள் திறக்கும் உத்தரவு அந்நாட்டு அரசால் விடப்பட்டுள்ளது. வாரத்தில் ஐந்து நாட்கள் பள்ளி வழக்கம்போல நடைபெறும். ஆயினும் மாணவர்களை முறை வைத்து வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் நேற்றிலிருந்து பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஆயினும் பள்ளியில் உள்ள உணவகங்களைத் திறக்க அனுமதி இன்னும் கொடுக்க வில்லை. உடனே அனைத்துக்கும் அனுமதிக்காமல் படிப்படியாக ஒவ்வொன்றுக்காக விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதற்கு முன் ஜூன் 27-ம் தேதி 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.