சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியர் தீபா தலைமறைவு!
சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியர் தீபா தலைமறைவாகியுள்ளார்.
சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில் சிவசங்கர் பாபாவை டெல்லியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சிவசங்கர் பாபா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர் தீபா தலைமறைவாகியுள்ளார். தீபாவை பிடிப்பதற்கு சிபிசிஐடி தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முன்னதாக சிவசங்கர் பாபாவுக்கு உதவி செய்ததாக பாரதி மற்றும் தீபா ஆசிரியர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் . இவர்கள் மாணவிகளை மூளை சலவை செய்து சிவசங்கர் பாபாவுக்கு விருந்தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிவசங்கருக்கு உடந்தையாக இருந்த பெண் பக்தை சுஷ்மிதாவிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் அவரை நேற்று மாலை கைது செய்தது குறிப்பிடத்தக்கது