வைகை ஆற்றில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி பலி!

 

வைகை ஆற்றில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி பலி!

தேனி

ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் குளித்த 9ஆம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சோலைமலை. இவரது மகன் பிரதீப் (14). இவர் அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த பிரதீப், இன்று நண்பர்களுடன் வைகை ஆற்றில் உள்ள தடுப்பணைக்கு குளிக்க சென்றார்.

வைகை ஆற்றில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி பலி!

ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக புதை மணலில் சிக்கி மூழ்கினார். அவருடன் வந்த சிறுவர்கள் கூச்சலிட்டதை கண்ட அந்த பகுதி இளைஞர்கள் ஆற்றில் இருந்து சிறுவனை மீட்டு, தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கண்டமனூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து சோலைமலை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.