ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்  உடல்நிலை சிறையில் அடைக்கும் போதே இப்படி தான் இருந்ததாம் : வெளியான மருத்துவ சான்றிதழ்!

 

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்  உடல்நிலை சிறையில் அடைக்கும் போதே இப்படி தான் இருந்ததாம் : வெளியான மருத்துவ சான்றிதழ்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் நடைமுறைகளை மீறி நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் சாத்தான்குளம் போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். இதையடுத்து காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த பென்னிக்ஸ் உயிரிழக்க, ஜெயராஜ் மருத்துவமனையில் பலியானார். போலீசாரின் தாக்குதலால் தான் இரண்டு உயிரிழப்புகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் இந்த சம்பவத்திற்கு வியாபாரிகள் சங்கம் சார்பாக சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளில் கடையடைப்பு செய்து வணிகர்கள் போராட்டம் செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்  உடல்நிலை குறித்த சான்றிதழை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் இருவருக்கும் ஆசன வாயிலிருந்து ரத்தம் வந்ததாகவும், கால்வீக்கம் இருந்ததாகவும் , முழங்கைகள் மற்றும் மணிக்கட்டுகள் காயங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஜெயராஜுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழில் அவர்கள் இருவரை சிறையில் அடைக்க வந்த காவலர்களான செல்லதுரை மற்றும் முத்து ராஜ் ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.