சாத்தான்குளம் விவகாரம்: பொய்யான தகவல்களை வெளியிட்டால் நடவடிக்கை- சிபிசிஐடி

 

சாத்தான்குளம் விவகாரம்: பொய்யான தகவல்களை வெளியிட்டால் நடவடிக்கை- சிபிசிஐடி

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக போலியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதாக இணையதள பத்திரிகை மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை சமூக வலைதளங்களில் மூலம் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்தது தொடர்பாக சிபிசிஐடி பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் தொடர்புடைய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு நேர்மை மற்றும் வெளிப்படையான புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் செய்தி மையம் என்ற பத்திரிகை இணைய தளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரது உடம்பில் நெஞ்சுப்பகுதி, கழுத்து மற்றும் உடம்பு ஆகிய பாகங்களில் கொடூரமான வெட்டுக்காயங்கள் உள்ளதாக புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் விவகாரம்: பொய்யான தகவல்களை வெளியிட்டால் நடவடிக்கை- சிபிசிஐடி

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில் உள்ள காயங்களோடு பிரேத பரிசோதனை மருத்துவர்களால் குறிப்பிட்டுள்ள காயங்களுடன் ஒப்பிடும்போது ஒத்துப்போகவில்லை. மக்கள் செய்தி மையம் இணையதளம் வெளிட்டுள்ள புகைப்படங்களை பார்வையிடும்போது அவைகள் சித்தரித்து பொதுமக்களது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு வெளியிடப்பட்டிருப்பது தெரியவருகிறது. இவ்வாறு வெளியிடப்படும் செய்திகள் வழக்கின் விசாரணைக்கு
தடையாக அமைந்துவிடும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக புகார் பெறப்பட்டு சிபிசிஐடி பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக மக்கள் செய்தி மையத்தின் எடிட்டர் அவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இம்மாதிரியான சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பொய்யான செய்திகளை உள்நோக்கத்துடனும், தீங்கிழைக்கும் நோக்குடனும் விருப்பு வெறுப்புகளுடன் புழக்கத்தில் பரவ விடுவதாக தெரியவருகிறது.

இவ்வாறான பொய்யான தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவோர் மீது சட்டத்திற்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக இவ்வாறான பதிவுகள் மற்றும் பொய்யான செய்திகளை தனி நபரோ அல்லது அமைப்புகளாலோ இணையத்தில் பகிர்ந்தால் அவற்றினை அவர்களே நீக்குதல் வேண்டும். இல்லை எனில் எழுதுவோர் மற்றும் வெளியீட்டாளர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.