சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ ஏற்றது! முதல்வர் கோரிக்கையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையை ஏற்று, சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் காவலில் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ ஏற்றுக்கொள்ளும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த தந்தை, மகன் போலீஸ் காவலில் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும், இதற்கான அனுமதியையும் நீதிமன்றத்தில் கேட்டது. சி.பி.ஐ-வசம் வழக்கை ஒப்படைப்பது என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்த பிறகு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று கூறியதைத் தொடர்ந்து வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.
சி.பி.ஐ வழக்கை ஏற்று விசாரணையைத் தொடங்கும் வரை இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. விசாரணை அதிகாரியை நீதிமன்றமே நியமித்தது. இதைத் தொடர்ந்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். தற்போது குற்றவாளிகள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ இந்த வழக்கை விசாரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இனி ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள்.