சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மரணம்: ஆசன வாயில் காயம் இருந்ததாக பகீர் தகவல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதில் இன்று நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த அறிக்கையில், இருவரின் உடலில் அதிக அளவு காயம் இருந்தது. இதனால் சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு முகாந்திரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், காவலர்கள் கொடுத்த அறிக்கைக்கும் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு மாறுபாடுகள் அதிகமாக இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல்களில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், ஆசன வாயில் காயம் மற்றும் கொப்பளங்கள் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தீவிர சிகிச்சை அளித்திருந்தால் பென்னிக்ஸை காப்பாற்றி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.