சர்கார் சர்ச்சை- ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடர்ந்த வழக்கு ரத்து

 

சர்கார் சர்ச்சை- ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடர்ந்த வழக்கு ரத்து

சர்கார் படம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது போலீசார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்கார் சர்ச்சை- ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடர்ந்த வழக்கு ரத்து

நடிகர் விஜய்,நடிகை கீர்த்திசுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம் சர்கார். இந்த படத்தில் அரசின் இலவச திட்டங்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதாக கூறி, தொடர்ந்து தேவராஜன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், முருகதாஸ் மீது நான்கு பிரிவுகளில் கடந்த 2018 ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முருகதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,
படத்தை தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கிய பின்னர், தனி நபரின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக ஏன் செயல்படுகிறீர்கள்? என்று அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

திரைப்படங்களை திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணைக்கு ஏற்கனவே இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி தண்டபாணி முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேகானந்தன், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு போடப்பட்ட வழக்கு எனக்கூறி வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி திரைப்படத்தை தணிக்கை செய்த பிறகு அதற்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு காழ்ப்புணர்ச்சியோடு,தனி நபரால் கொடுக்கப்பட்ட புகார் என்று கூறி அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.