“ஜெ. உடன் பிறவா சகோதரி சசிகலா ; நன்றி மறப்பது நன்றன்று.. ” : சரத்குமார் பேட்டி!
சசிகலா சந்திப்பு குறித்து சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் விளக்கமளித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என மும்முரம் காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பது உறுதியான நிலையில் பாமக, தேமுதிக மற்றும் சமத்துவ மக்கள் கட்சி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சூழலில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னை தி நகரில் சசிகலா தங்கியுள்ள இல்லத்திற்கு நேரடியாக சென்று அவரை சந்தித்தார் .அவருடன் அவரது மனைவி ராதிகா சரத்குமாரும் உடன் வந்திருந்தார்.
இந்நிலையில் சென்னை திநகர் இல்லத்தில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ராதிகா சரத்குமார், “ஜெயலலிதா பிறந்தநாளன்று நாங்கள் சின்னம்மாவை சந்தித்துள்ளோம். புரட்சித்தலைவியின் உடன்பிறவா சகோதரி என்று தான் எனக்கு சசிகலாவை தெரியும். அந்த சகோதரியை நாங்கள் இன்று பார்க்க வந்துள்ளோம் . அவரது உடல் நலத்தைப் பற்றி இன்று விசாரிக்க வந்தோம் ” என்றார். தொடர்ந்து பேசிய நடிகர் சரத்குமார், “நன்றி மறப்பது நன்றன்று.. என்ற அடிப்படையில் சசிகலாவை சந்திக்க வந்தேன்; உடல்நலம் பற்றி விசாரித்தேன் ” என்றார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண்போம் என சசிகலா சூளுரைத்துள்ள நிலையில் , அதிமுக கூட்டணியில் உள்ள சரத்குமார் தற்போது சசிகலாவை சந்தித்துள்ளது சசிகலாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது