கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் அவசர சட்டத்தை சட்டப்பேரவையில் எதிர்ப்போம்… அகிலேஷ் யாதவ்
உத்தர பிரதேசத்தில் அமலுக்கு வந்துள்ள கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் அவசர சட்டத்தை சட்டப்பேரவையில் எதிர்ப்போம் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
லவ் ஜிஹாத் பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில், உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு, உத்தர பிரதேசம் சட்டவிரோதமாக மதம் மாற்றுவதை தடை செய்யும் அவசர சட்டம் 2020 நிறைவேற்றியது. இந்த அவசர சட்டத்துக்கு அம்மாநில கவர்னர் ஆனந்திபென் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து நம் நாட்டில் முதல் முறையாக உத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
கட்டாய மத மாற்றத்தை தடை செய்யும் உத்தர பிரதேச அரசின் அவசர சட்டத்துக்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: சட்டப்பேரவையில் இந்த அவசர சட்டத்தை எங்களது கட்சி எதிர்க்கும். இதற்கு பதிலாக விவசாயிகள் உற்பத்திகளை கொள்முதல் செய்வதற்காக அவசர சட்டம் ஒன்றை கொண்டு வாருங்கள். வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் ஒரு அவசர சட்டத்தை கொண்டு வாருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அம்மாநில அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் கட்டாய மத மாற்றத்தை தடை செய்யும் புதிய அவசர சட்டத்தை நிறைவேற்றியது. இதனை மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். திருமணத்துக்கு பிறகு தங்கள் மதத்தை மாற்ற விரும்புவோர் அதற்காக மாவட்ட கலெக்டரிம் விண்ணப்பிக்க வேண்டும்.