சேலத்தில் 7 வயது சிறுமி விற்பனை? – உறவினர் புகார் குறித்து போலீசார் விசாரணை!

 

சேலத்தில் 7 வயது சிறுமி விற்பனை? – உறவினர் புகார் குறித்து போலீசார் விசாரணை!

சேலம்

சேலத்தில் 7 வயது சிறுமியை, அவரது தாய் 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் அடுத்த சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சுமதி இவர்களுக்கு, 2 பெண்கள் உள்பட 3 குழந்தைகள் உள்ளனர். சுமதி, சேலம் முல்லை நகரில் உள்ள தொழிலதிபர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு, தனது 7 வயது மகளை, வேலை செய்யும் வீட்டிலேயே விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறுமியை காண சென்ற சுமதியின் தாயார் சின்ன பொண்ணுவுக்கு, அவரை வீட்டின் உரிமையாளர் காட்ட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னபொண்ணு, இதுகுறித்து சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சேலத்தில் 7 வயது சிறுமி விற்பனை? – உறவினர் புகார் குறித்து போலீசார் விசாரணை!

இதனிடையே, இந்த புகார் சேலம் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, மகளிர் போலீசார் மற்றும் மாவட்ட சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் சிறுமியை மீட்டு காப்பகம் ஒன்றில் ஒப்படைத்தனர். மேலும், இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், சுமதி தனது மகளை 10 லட்சம் ரூபாய்க்கு, தான் பணிபுரியும் வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்து விட்டதாக, அவரது உறவுக்கார பெண்ணிடம் கூறுவது போன்ற ஆடியோ வெளியாகியது. இதனால் பரபரப்பு தொற்றிகொண்ட நிலையில், ஆடியோ விவகாரம் குறித்தும், மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.