”எனக்கு கொரோனாவா? இல்லையா?” – குழப்பத்தில் சாய்னா நேவால்

 

”எனக்கு கொரோனாவா? இல்லையா?” – குழப்பத்தில் சாய்னா நேவால்

தாய்லாந்து ஓபன் தொடரில் களமிறங்கவிருந்த சாய்னாவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், பரிசோதனையின் முடிவு வராமலேயே தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறுவது குழப்பமாக இருக்கிறது என சாய்னா கூறியுள்ளார்.

கொரோனா பரவலுக்குப் பின் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளோடு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில் இந்தாண்டுக்கான தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்கியுள்ளது.

”எனக்கு கொரோனாவா? இல்லையா?” – குழப்பத்தில் சாய்னா நேவால்

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் கொரோனா நெகட்டிவ் முடிவுடன் பாங்காக் வந்திறங்கினர். அதில், இந்திய வீரர்களான சாய்னா நேவால், அவரது கணவர் பாருபள்ளி காஸ்யப், பிரனோய், பிவி சிந்து உள்ளிட்டோரும் அடக்கம்.

இவர்களும் அனைவரும் பயோ பபுள் பாதுகாப்பு முறைப்படி ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். வீரர்களுடன் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என யாரும் தொடர்பில் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. போட்டி நடக்கும்போதும் இதே வழிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

”எனக்கு கொரோனாவா? இல்லையா?” – குழப்பத்தில் சாய்னா நேவால்

போட்டியில் பங்கேற்பதற்கு முன் வீரர்கள் அனைவரும் மூன்று கட்டங்களாக கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. மூன்றாம் கட்ட டெஸ்ட் நேற்று எடுக்கப்பட்டதாக சாய்னா நேவால் ட்வீட் செய்திருந்தார். டெஸ்டின் முடிவில் சாய்னாவுக்கும் அவரது கணவர் காஸ்யப்புக்கும் பிரனோயிக்கும் பாசிட்டிவ் என வந்ததாகவும், அவர்கள் இந்தத் தொடரில் விளையாட மாட்டார்கள் எனவும் இந்திய பேட்மிண்டன் சங்கம்இன்று அறிவித்தது.

இதனையடுத்து தீவிரத்தை உணர்ந்து தாய்லாந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்திய வீரர்கள், ஊழியர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக சாய்னா வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இன்று பயிற்சிக்குச் செல்வதற்கு முன் எனக்கு பாசிட்டிவ் எனவும், அதனால் மருத்துவமனை செல்லுமாறும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். டெஸ்ட் எடுத்த 5 மணி நேரத்திற்குள் ரிசல்ட் வரும் என்று கூறியிருந்தார்கள். ஆனால், இதுவரை கொரோனா ரிசல்ட் எனக்கு வந்துசேரவில்லை. எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தொலைப்பேசி வாயிலாகப் பேட்டியளித்த அவர், “நான் தொடரை விட்டு வெளியேறப் போவதில்லை. உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு என்னிடம் மருத்துவமனை சென்று டெஸ்ட் எடுக்குமாறு கூறியது அதற்கான ரிசல்ட்டை நான் இன்னும் பெறவில்லை” என்று கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு, “நோய் கட்டுப்பாட்டுத் துறையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வீரர்களுக்கு தினசரி டெஸ்ட் எடுக்கப்படும். அவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள்” என்று விளக்கமளித்துள்ளது.